அமைச்சர் பொன்முடி முகநூல்
தமிழ்நாடு

சர்ச்சைப் பேச்சு | மன்னிப்பு தெரிவித்த அமைச்சர் பொன்முடி!

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அமைச்சர் பொன்முடி, தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

Prakash J

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களைத் தவறாகச் சித்தரித்தும், சைவம், வைணம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது, நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுக கட்சியினரே அவருக்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்தனர். குறிப்பாக, மக்களவை எம்பி கனிமொழியே அவருக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவர் வகித்து வந்த கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி பேசிய கருத்துக்கு, மன்னிப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பொன்முடி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.