மின் வாரிய அதிகாரிகள் இருவரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவிட்டார். மின் பகிர்மான கழகத்தின் உடுமலை மரபுசாரா எரிசக்தி பிரிவில் பணியாற்றும் மேற்பார்வை பொறியாளர் ஆர்.ஜி.பிரசாத், செயற்பொறியாளர் கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் நிர்மல் குமார் துறைரீதியாக நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் இருவரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மின் பகிர்மானக் கழகத்தில் பணிபுரிந்து வந்த மேற்பார்வை பொறியாளர் மற்றும் செயற் பொறியாளர் ஆகியோரை நிர்வாகக் காரணங்களுக்காக உடனடியாகப் பணியிலிருந்து விடுவித்து, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டப் பிரிவு (NCES) மேற்பார்வை பொறியாளராகப் பணியாற்றி வந்த ஆர்.ஜி.பிரசாத் மற்றும் காற்றாலை பண்ணை பிரிவின் (WFP) செயற் பொறியாளர் கே.ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும், நிர்வாகத் தேவைகளின் அடிப்படையில் (08.06.2026) முதல் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதாகத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜே.ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள், இந்த அதிகாரிகளை உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்குமாறும், அவர்களின் பொறுப்புகளை முறையாக ஒப்படைத்து, அது குறித்த அறிக்கையைச் செயலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உடுமலை மின்வாரிய அலுவலகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த இரு அதிகாரிகள் ஒரே நாளில் அதிரடியாக விடுவிக்கப்பட்டிருப்பது மின்வாரியத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.