தமிழ்நாடு

`மீண்டும் பள்ளிக்கு போகலாம்...'-தான் படித்த பள்ளி வகுப்பறையில் அமைச்சர் மெய்யநாதன்

webteam

புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் கலந்துக்கொண்டனர். இவர்கள் இருவரும், அதே பள்ளியில் மேல்நிலை படிப்பை படித்து முடித்தவர்களாவர். இதையடுத்து, தாங்கள் படித்த வகுப்பறையில் உள்ள மேசைகளில் அமர்ந்து புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு தங்களது பள்ளிகால மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யாநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் கலந்து கொண்டு அப்பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.

இந்நிலையில் இந்த பள்ளியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் 1986-1988 ஆண்டுகளில் அவரது மேல்நிலை படிப்பை படித்து முடித்ததாகவும், அதே போல் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா 1993-1995 காலகட்டத்தில் மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்ததாகவும் அவர்களே கூறி, தங்கள் அனுபவங்களை எடுத்துக் கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகிய இருவரும் அவர்கள் படித்த வகுப்பறையில் உள்ள மேசையில் அமர்ந்து புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு தங்களது பள்ளிக்கால மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.‌