தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்று அம்மக்களைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களுடன் எப்போதும் துணை நிற்பேன் எனத் தெரிவித்தார். ஆளும் அரசை கடுமையாக விமர்சித்த அவர், திமுக நாடகமாடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக உரையாற்றினார். அவர் கூறுகையில், "போக்குவரத்து மேம்பாடு மட்டும்தான் அந்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும். பெங்களூர், ஐதராபாத், டெல்லி போன்ற நகரங்களில் 5000, 5500 ஏக்கர் நிலப்பரப்பில் விமான நிலையங்கள் அமைந்துள்ளது. இப்படி பெரிய விமான நிலையங்களில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கும் போயிங் போன்ற பெரிய விமானங்கள், ஈரடுக்கு விமானங்கள் போன்றவை தரையிரங்கும் வசதிகள் உள்ளன.
தமிழ்நாட்டிலும், சென்னையிலும் உள்ள பயணிகள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால், மும்பைக்கும் டெல்லிக்கும் செல்ல வேண்டி இருக்கிறது. அதற்குக் காரணம் சென்னை விமான நிலையத்தில் பெரிய விமான நிலையங்களை தரையிறக்க முடியாத சூழலால்தான்.
பெரிய அளவிலான சரக்கு விமானங்களை சென்னையில் தரையிறக்க முடியாத காரணத்தினால், தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் உபகரணங்கள் எளிதாக வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் வளராத சூழல் ஏற்படுகிறது. சென்னையைப் பொருத்தவரை இன்னொரு பெரிய விமான நிலையம் 15 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய ஒன்று.
இந்தியாவில் பிற மாநிலங்களில் மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை விட தமிழ்நாட்டில் அதிகமான இழப்பீடுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களைப் பொருத்தவரை சந்தை மதிப்பைவிட கூடுதலாக மூன்றரை மடங்கு தருவதற்குறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த கிராமத்தில் இருக்கும் வீடுகளின் வரிசையமைப்பிலேயே புதிய இடத்திலும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தினை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.
சூழலியல் மேல் எல்லோருக்கும் ஆர்வம் இருக்கிறது என்றாலும் சிறு அளவிலான பாதிப்புகள் வரத்தான் செய்யும். பொருளாதார வளர்ச்சி வேண்டும் என்கிறபோது சூழலியல் பாதிப்புகள் சிறிய அளவில் இருக்கத்தான் செய்யும்., அதை பொருத்துக் கொண்டுதான் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவிலான சமூக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இடையே சிறு சிறு பாதிப்புகளைப் பெரிதாக்கிக் கொள்ளக்கூடாது. ஒன்றிய அரசுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உறுதுணையாக இல்லை. அதற்கு துணை போகிற வகையில், ஒரு சில அரசியல் கட்சிகள் அரசியல் ஆக்குவதென்பது சரியானதாக இருக்காது” எனத் தெரிவித்தார்.