தமிழ்நாடு

``கியூபா போல உலகுக்கு முன் உதாரணமாக உள்ளது தமிழகம்“- அமைச்சர் மா.சுப்ரமணியன் பெருமிதம்

நிவேதா ஜெகராஜா

மருத்துவத்துறையில் தமிழகம் கியூபா போல் உலகிற்கு முன் உதாரணமாக இருக்கும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த நசரத் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ மையங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். தொடர்ந்து அதன் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், “இந்த பகுதியில் 6 கே.எல்.ஆக்சிஜன் டேங்க் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கொரோனாவின் பல்வேறு அலைகளில் பெரிய பாதிப்புகளில் இருந்து மீண்டு சகஜ நிலைக்கு வந்து இருப்பது மக்களின் ஒத்துழைப்பு தான் காரணம். தடுப்பூசியை ஒரு இயக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றியுள்ளார். இந்தியாவில் 17 வயதினருக்கு தடுப்பூசி போட்டதிலும், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், மாற்று திறனாளிகளுக்கு தடுப்பூசி போட்டதிலும், தடுப்பூசிகளை வீனாக்காமல் இருப்பதிலும் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 நாட்களாக இறப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. ஒட்டு மொத்த மக்கள் ஒருங்கினைந்ததால் இந்த சாதனை செய்ய முடிந்தது.

இருப்பினும் உலகை விட்டு கொரோனா தொற்று முடியவில்லை 2 மாதங்கள் கட்டாயம் மக்கள் தொடர்ந்து விதிமுறைகளை பின் பற்ற வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இவற்றை தொடர்ந்து, மருத்துவத் துறையில் கியூபா போல் தமிழகம் உலகிற்கு முன் உதாரணமாக இருக்கும் எனவும் பெருமிதம் கூறினார்.