Minister Ma.Subramanian
Minister Ma.Subramanian pt desk
தமிழ்நாடு

”இப்போ வரை எதும் இல்லை.. தேவைப்பட்டால் கட்டாயமாக்குவோம்” - மாஸ்க் அவசியமும் அமைச்சர் மா.சு பதிலும்!

PT WEB

பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. இதுவரை மருத்துவமனையில் மட்டும்தான் முகக் கவசம் அணிய வேண்டும் என கூறி இருக்கிறோம். தேவைப்பட்டால் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கண்ணகி நகர், மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள முதல் தலைமுறை கற்றல் பயிற்சி மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பரவல் குறித்தும் பேசியிருக்கிறார்.

காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடு!

1500-க்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகளுக்கு மருத்துவ பலன் கிடைத்து வருகிறது. ரூ.5 லட்சம் தொடங்கி மிகப்பெரிய அளவில் பலன் தந்து கொண்டிருக்கிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கணையம், கண், தோள்பட்டை ஆகிய பலதரப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பயனுள்ளதாக அமைகிறது. பிரதமரின் காப்பீட்டு திட்டம், முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

வருமுன் காப்போம் திட்டத்தை 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு விட்டார்கள். 1250 இடங்களில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 1497 இடங்களில் நடப்பு ஆண்டில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 9.4 லட்சம் பேர் இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவ பயன் பெற்றார்கள். இதன் மூலம் 14 லட்சம் பேர் பயன்பெறுவார். கண்ணகி நகர் மற்றும் எழில் நகரில் 6 முகாம்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. 4308 பேர் பணியில் அமர்த்தப்பட்டு வருகிறார்கள். 1021 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். 25,000 மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். 708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலின் நிலை!

வீரியமிக்க வைரஸ்-ஆக இல்லை, ஐந்து நாட்களில் குணமாகி வருகிறது. எனவே பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. இதுவரை மருத்துவமனையில் மட்டும் தான் முகக் கவசம் அணிய வேண்டும் என கூறி இருக்கிறோம். தேவைப்பட்டால் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும்.

மசோதாவை முடக்கிய ஆளுநர்!

ஆளுநர் அனைத்து மசோதாக்களையும் முடக்கி வைத்துள்ளது போல சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவையும் முடக்கி வைத்துள்ளார். இதனால் இதன் கட்டுமான பணிகள் நடைபெறுவது நிதி ஒதுக்குவது தாமதமாகி வருகிறது. தற்போது புதிதாக மரபணு மாற்றம் அடைந்துள்ள வைரஸ் பரவலுக்கு முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என எந்த மாநிலமும் தெரிவிக்காத நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என அறிவித்துள்ளோம் என்றார்.