மீன் சந்தைகளில் உள்ள மீன்களின் தரத்தினை ஆய்வு செய்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மீன்களின் தரத்தினை ஆய்வு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் உத்தரவு அறிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், நேற்று இரவு மதுரை, கரிமேடு மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது அங்கு விற்கப்பட்ட மீன்களில் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மீன்களின் தரம் குறைவாகவும், கெட்டுப்போன நிலையிலும் இருந்தது கண்டறியப்பட்டதாக கூறியுள்ளார்.
இத்தகைய கெட்டுப்போன மீன்கள் இரண்டு டன் அளவில் உணவு பாதுகாப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மீன்களின் தரத்தினை உறுதி செய்திடவும், தரம் குறைவான மீன்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அந்த விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட மாநிலம் முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு மீன்வளத்துறை இயக்குநரால் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மீன்கள் மற்றும் மீன் உணவுப் பொருட்களின் தரத்தினை தொடர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.