தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தவிர்க்க முடியாதது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்கும். வன்முறை என்பது எதற்கும் தீர்வாகாது. மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்திற்கும் அரசின் ஆதரவு கிடையாது” என்று கூறினார்.
மேலும், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதே அரசின் நிலைப்பாடு. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் குறித்த முழுமையான தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவு எடுக்கும்.
ஜனநாயக அமைப்பில் வன்முறை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கல்வீசித் தாக்குதல் நடத்தியது தவறு. தூத்துக்குடி போராட்ட சம்பவத்தை விசாரிக்க ஆணையம் அமைப்பது பற்றி அரசு முடிவு எடுக்கும்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.