தமிழ்நாடு

லடாக்கில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் பலி- குடும்பத்தினருக்கு கடம்பூர் ராஜூ நேரில் ஆறுதல்

webteam

கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ராணுவர் வீரர் கருப்பசாமி லடாக்கில் உயிரிழந்தையடுத்து அவரது குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் கருப்பசாமி(34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். நாயக் பதவி வகித்து வந்த இவர் காஷ்மீர் லடாக் பகுதியில் பணியாற்றி வந்தநிலையில் நேற்று காலை நடந்த விபத்தில் வீரமரணமடைந்தார்.

இதையடுத்து கருப்பசாமி வீட்டிற்கு சென்ற தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த கடம்பூர் ராஜூ, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை கருப்பசாமி குடும்பத்திற்கு வழங்கினார். அத்துடன் குழந்தைகளின் கல்வி செலவும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

அவருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் எம்.எல்.ஏ.சின்னப்பன் ஆகியோரும் இருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ “14 ஆண்டுகளாக இராணவத்தில் பணியாற்றி நாட்டுக்கு சேவையாற்றிய கருப்பசாமி விபத்தில் உயிரிழந்தார் என்பது அதிர்ச்சிக்குரியது மட்டுமல்ல. வேதனைக்குரியது. அவருடைய இழப்பு அவருடைய வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் வேதனை அளிக்ககூடியது.

இராணுவத்திடம் இருந்து முழுதகவலையும் பெற்றவுடன், கருப்பசாமி குடும்பத்திற்கு நிவாரண நிதி மற்றும் உதவிகளை அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தற்போது தனது சொந்த நிதியில் இருந்து நிதி வழங்கியுள்ளேன். கருப்பசாமியின் மனைவியின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வழங்கும் நிதியுதவி மட்டுமின்றி, கருப்பசாமியின் குழந்தைகளின் கல்வி செலவிற்கும் உதவி செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.