minister velu pt desk
தமிழ்நாடு

“அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த இறப்புகளுக்கு எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தாரா?” - அமைச்சர் எ.வ.வேலு

“அதிமுக ஆட்சியில் எத்தனையோ இறப்புகள் நடைபெற்றுள்ளது. அதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டாமா?” என மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

webteam

மயிலாடுதுறை சின்னகடை தெருவில் மயிலாடுதுறை நகர திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

minister velu

அப்போது பேசிய அவர், “கோவிலில் கட்டிடம் முதல் கலசம் வரை அனைத்தையும் நம்மவர்கள் தான் கட்டுகிறார்கள். ஆனால், தமிழைப் பற்றி தெரியாதவர்கள் மற்றும் இனம் புரியாதவர்கள் கோவிலில் யாகசாலை அமைத்து 48 நாட்கள் நமக்கே புரியாதவற்றை எல்லாம் சமஸ்கிருதத்தில் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள கடவுள்களுக்கு தமிழ் தானே பிடிக்கும்! சமஸ்கிருதமா பிடிக்கும்? சமஸ்கிருதத்தில் கடவுளிடம் ஏதேதோ சொல்லி கடைசியில் கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தை, செய்த நபர்களையே தொட்டுப் பார்க்க விடாமல் அதன் மீது தண்ணீரை கூட அவர்கள் தான் ஊற்றுகிறார்கள்.

அந்த தண்ணீரை அனைவரும் ஊற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தினை திராவிட மாடல் அரசு கொண்டுவந்துள்ளது. ஆகம விதிகளை நானும் படித்து தான் வந்துள்ளேன். எந்த ஆகம விதிப்படி, டிக்கெட் கொடுத்தால் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என உள்ளது? பெயர், குலம் மற்றும் நட்சத்திரம் ஆகியவற்றைக் கேட்டு அர்ச்சனை செய்வது எந்த ஆகம விதியிலும் இல்லை” என்றார்.

EPS

தொடர்ந்து பேசுகையில், “முதல்வர் ஸ்டாலின் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். நீங்கள் தான் எங்களுக்கு ஓட்டு போட்டீர்களா? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்ததற்காக எடப்பாடி ராஜினாமா செய்தாரா? அதிமுக ஆட்சி காலத்தில் எத்தனையோ இறப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டாமா?

ஜெயலலிதா ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த போது, செல்வி ஜெயலலிதா ஆட்சியை ராஜினாமா செய்தார்களா? எங்கள் ஆட்சியில் நடந்தது தவறுதான். அதை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தரத்துடன் பேச வேண்டும். Accidental-ஆகத்தான் நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்ததார் எடப்பாடி பழனிசாமி. உடனடியாக தேர்தல் நடைபெற வேண்டும் என ஆசையா?அதற்குள் என்ன அவசரம்?

minister velu

எங்களுடைய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நாங்கள் அளித்த தேர்தல் அறிக்கையை மறுபதிப்பாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் அறிக்கையாக அளித்து ஆட்சியைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது என்று சொன்னால்... அடுத்து வரும் தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்” என்றார்.