Minister Durai murugan
Minister Durai murugan pt desk
தமிழ்நாடு

"கவர்னர் மாளிகை அரசின் இடம் அங்க கூட புதிய சட்டமன்றம் கட்டலாம்" - அமைச்சர் துரைமுருகன் கலகல

Snehatara

புதிய சட்டமன்றத்தை கட்டுவதற்காக வேண்டுமானால் ராஜ் பவன் இடத்தைக்கூட எடுக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கியபோது பேசிய அமைச்சர் துரைமுருகன், ”விவாதத்தில் உறுப்பினர்கள் பேசும்போது, புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதை நானும் ஒத்துக் கொள்கிறேன். முதலமைச்சரிடம் நானும் இதே கோரிக்கையை வேண்டுகிறேன். விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது ஆட்சிக்காலத்திலேயே ஒரு புதிய சட்டமன்றத்தை கட்டுவார்.

கேரளா, ஆந்திராவில் சட்டமன்றங்கள் எப்படி உள்ளது என போய் பாருங்கள். சென்னையில் ராஜ்பவனை எடுத்துக்கொள்ளுங்கள்; அது நம்முடைய இடம்தான். அதனுடைய வரலாறை படித்து பார்த்தேன். அந்த இடத்தையும் நாம் எடுக்கலாம். கிண்டி ரேஸ் கோர்ஸை எடுத்துக்கொள்ளுங்கள். 700 ஏக்கர் கொண்ட இடம் அது. அவர்கள் பணம் கட்ட முடியாத நிலையில் உள்ளார்கள். அதையும் வேண்டுமானால் நாம் சட்டமன்றத்திற்காக எடுக்கலாம்.

முதலமைச்சர் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். அவருடைய காலத்தில் புதிய சட்டமன்றம் உருவாக ஆனதை செய்ய வேண்டும். ஆனால் இந்த கால கட்டத்திலேயே கட்ட வேண்டும். அப்போதுதான் நாமும் இருப்போம்” என பேசினார்.