ஜெயசீலன் மற்றும் நரேஷ்
ஜெயசீலன் மற்றும் நரேஷ் file image
தமிழ்நாடு

வேளச்சேரி: 40அடி பள்ளத்தில் சிக்கி பலியான தொழிலாளர்கள் குடும்பத்தாருக்கு நிவாரணம் - அமைச்சர் உத்தரவு

யுவபுருஷ்

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. புயலுக்கு முன்பு, வேளச்சேரியில் உள்ள 5 பர்லாங் சாலையில் எரிவாயு நிலயத்தின் அருகே உள்ள கிரீன் டெக் சொலியூசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கட்டுமானத்திற்காக 50 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதீத மழயால், பள்ளம் நிரம்பிய நிலையில், அருகே இருந்த ஊழியர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அறைகள் வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்டு பள்ளத்தில் விழுந்தது.

இந்த பள்ளத்தில் 4 ஊழியர்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில், முதற்கட்டமாக காயங்களுடன் 2 பேர் மீட்கப்பட்டனர். மேலும் இரண்டு பேரின் குடும்பத்தினர், அவர்களை மீட்க வேண்டும் என்று 5 நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். சுமார் 64 அடிக்கு தோண்ட திட்டமிடப்பட்ட இடத்தில் 50 அடிக்கு தோண்டப்பட்டிருந்தது. அதேபோல் 50 அடி அகலமும் கொண்ட பரப்பில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இயல்பாகவே இது தாழ்வான பகுதியாக இருக்கும் நிலையில், குடியிருப்பு கண்டெய்னரானது மழைநீரோடு உள்ளே வீழ்ந்தது.

அமைச்சர்கள், அதிகாரிகளின் மேற்பார்வையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சிக்கியிருந்தவர்களில் ஒருவரான தொழிலாளி நரேஷ் என்பவர், 5 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். அன்றைய தினமே மீதம் இருந்த ஜெயசீலனும் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், கர்ப்பிணி பெண்ணின் கணவரான உயிரிழந்த ஜெயசீலன் குடும்பத்திற்கு ரூ.15,49,625/-, நரேஷ் குடும்பத்திற்கு ரூ.16,85,000/ நிவாரண நிதி வழங்க சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் வைத்து ஜெயசீலன் மற்றும் நரேஷ் குடும்பத்தாருக்கு அமைச்சர் வழங்கியுள்ளார்.