தமிழ்நாடு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் விவகாரம் திமுக ஆட்சியைத் தொடர்ந்து தவெக ஆட்சியிலும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் விற்கும் கடைக்காரர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். மேலும், இது சம்பந்தமாக இமெயில் மூலம் புகார் வந்ததையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதேபோல, டாஸ்மாக் ஊழியர்களின் குறைகளை அமைச்சர் விக்னேஷ் கேட்டறிந்து வருகிறார்.
இந்தசூழலில் தான், இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியம் 20% வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், டாஸ்மாக் ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றியுள்ளார். இனி பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், ஊதிய உயர்வால் அரசுக்கு ரூ.110.74 கோடி கூடுதலாக செலவு ஆகும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த ஊதிய உயர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதல் அமலுக்கு வரவிருக்கிறது. தற்போது ஒரு கடை மேற்பார்வையாளருக்கு மாதத்திற்கு ரூ.17,850 சம்பளமும், விற்பனையாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.15,530 சம்பளமும், உதவி விற்பனையாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.14,340 சம்பளம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவை முறையே, ரூ. 22,313, ரூ. 19,413, ரூ. 17,925 ஆக உயர்த்தபடவிருக்கிறது.