தமிழ்நாடு

’மூன்றரை மடங்கு கூடுதல் இழப்பீடு’-பரந்தூர் விமான நிலையம் குறித்து அமைச்சர் வேலு வாக்குறுதி

webteam

பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலத்திற்கான இழப்பீடு சந்தை விலையைவிட மூன்றரை மடங்கு அதிகமாக வழங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சர்வே எண் அடிப்படையில் நிலத்தின் மதிப்பு மாறுபடும். எனவே, கையகப்படுத்தும் நிலத்திற்கான சந்தை விலையைவிட மூன்றரை மடங்கு இழப்பீடு அதிகமாக வழங்கப்படும். 13 கிராமத்தில் 1,005 வீடுகள் அப்புறப்படுத்த உள்ளது.  கையகப்படுத்தும் நிலத்திற்கு பணமும், வீடு கட்டுவதற்கு நிலமும், பணமும் வழங்க உள்ளோம். விமானநிலையம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகாமையில், விரும்பக்கூடிய இடத்தில் வசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

அப்பகுதியில் வசிப்பவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும். விவசாயிகள் எந்த விதத்திலும் பாதிப்படையக்கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். ஆனால், இதுபோன்ற பொது நோக்கத்திற்கான திட்டங்கள் வரும்போது விவசாய நிலத்தை எடுப்பதை தவிர வேற வழி இல்லை.

பெங்களூர், ஹைதராபாத் வளர்ச்சி நம்மை விட கூடுதலாக உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது நமக்கு புதிய விமான நிலையம் அவசியமாக உள்ளது. பன்னூர், பரந்தூர் ஆகிய இடங்களில் ஒப்பிட்டு பார்க்கும் போது, பரந்தூரில் குறைந்த வீடுகள் தான் உள்ளது. அதனால் தான் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்படும் மக்களும் குறைவு. தமிழகத்தின் பொருளாதாரம், அந்நிய செலாவணி ஈட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின், புதிய விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளார்" என்றார்.

இதையும் படிக்க: 'ஸ்டாலின்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்' - சிறுமி தான்யாவின் பெற்றோர் உருக்கம்!