திருச்செந்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளரின் டெபாசிட்கூட காப்பாற்ற முடியாது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். விஜய் ரசிகர்கள் அவரைப் பார்க்க மட்டுமே வருவார்கள், வாக்குகள் கூட்டணிக் கட்சிகளுக்கே செல்லும் என்றும், விஜய் பாஜக அனுப்பிய வேட்பாளர்போல சிறுபான்மை ஓட்டுகளைப் பிளவுபடுத்த வந்துள்ளார்
ஸ்ரீவைகுண்டம் அருகே சுப்பிரமணியபுரத்தில உள்ள தனியார் மண்டபத்தில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் உள்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பேசினர். பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நாங்களும் விஜய் ரசிகர்கள்தான். ஓட்டு போடும்போது அந்தந்த கட்சிகளுக்கு என ஓட்டு போடுவார்கள். திருச்செந்தூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்திற்கு டெபாசிட் போய்விடும்.
விஜய் பாரதிய ஜனதாவால் அனுப்பப்பட்ட வேட்பாளர் மாதிரிதான். அவர் சிறுபான்மை இன மக்கள் ஓட்டுகளை பிரிப்பதற்காக திட்டமிட்டு வந்துள்ளார். ஆனால் சிறுபான்மை இன மக்கள் ஏமாற மாட்டார்கள். அது ஒட்டுமொத்தமாக மதச்சார்பற்ற கூட்டணிக்கு விழும். எடப்பாடிக்கு முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் விழாது. காலில் விழுந்து கேட்ட அவர், காலை வாரி விட்டதினால் வாக்களிக்க மாட்டார்கள். பாரதிய ஜனதாதான் மத்தியில் ஆட்சியில் உள்ளது. அவர்களது கண்ட்ரோலில்தான் சினிமா உள்ளது. ’ஜனநாயகன்’ படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கும் விஜய் அதைப் பற்றி பேசுவதில்லை” என்றார் அவர்.