தமிழ்நாடு

போதையில் தாறுமாறாக ஆட்டோ ஓட்டி விவசாயி மீது மோதி கொன்ற டிரைவர்: பரமத்தி அருகே பரபரப்பு!

webteam

பரமத்தி வேலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி மீது மினி ஆட்டோ மோதிய விபத்தில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி சோமசுந்தரம். இவர் ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர் மலை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது கபிலர் மலையில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு வந்த மினி ஆட்டோ தாறுமாறாக ஓடி விவசாயி சோமசுந்தரத்தின் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த சோதமசுந்தரம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய மினி ஆட்டோ தலைகுப்புற கவிழந்தது. இதில், ஆட்டோவினுள் இருந்த ஓட்டுநர் குணசேகரனை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டனர். அப்போது குணசேகர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை பிடித்த பொதுமக்கள் ஜேடர்பாளையம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார், விவசாயி சோமசுந்தரத்தின் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.