தமிழ் திரைப்பட தொழிலாளர் அமைப்பான ஃபெப்சி சார்பில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகேயுள்ள பையனூரில் 15 ஏக்கரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. திரைப்பட தொழிலாளர் அமைப்பான ஃபெப்சி சார்பில் இந்த படப்பிடிப்பு தளம் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் படப்பிடிப்பு தளத்தை இன்று முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர், நடிகையர், தொழிலாளர் அமைப்பினர் ஏராளமானோரும் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர், நாகரிக உலகில் மனிதன் உருவாக்கிய மிகச்சிறந்த படைப்பு திரைத்துறை என்றார். சமூக கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் திரைப்படங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறினார். ஜெயலலிதா பெயரில் அமைக்கப்படும் படப்பிடிப்புத் தளத்திற்கு ரூ.5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.