தமிழ்நாடு

“இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம்” - ஜெ.தீபா

webteam

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தீபா, “ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நான் ஒரு கட்சியை தொடங்கினேன். அதைத்தொடர்ந்து எனது கணவர் ஒரு கட்சியை தொடங்கினார். பின்னர் இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டது. இதையடுத்து நாங்கள் தேர்தலின்போது அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தோம். அதை அதிமுக தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர் அம்மா பேரவையை அதிமுவுடன் இணைக்க முடிவு செய்தோம். ஆனால் எனது உடல்நிலை மோசமடைந்ததால், எந்தப் பணியிலும் ஈடுபட முடியவில்லை. இனிமேல் அதிமுவுடன் இணைந்து செயல்படுவோம்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மாத இறுதியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்திருந்த ஜெ.தீபா, அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். அத்துடன் இனிமேல் எந்த நிலையிலும் அரசியலுக்கு வரமாட்டேன் என அவர் கூறியிருந்தார்.