தமிழ்நாடு

மீண்டும் நிரம்பும் மேட்டூர் அணை?

webteam

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றிரவு நாற்பதாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டுகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுவிற்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,40,000 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்து வருகிறது. முன்தாக நேற்று கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணயிலிருந்து 1,43,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.  

இதன்காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.08 அடியாகவும், நீர் இருப்பு 92.1 டிஎம்சியாகவும் உள்ளது.  மேலும் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து சுமார் 88,843 கனஅடியாக உள்ளது.  

இதனையெடுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் அணையின் நீர்மட்டம் இன்றிரவு மீண்டும் அதன் முழு கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி கரையோர கிராமங்களில் நேற்று முதல் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.