தமிழ்நாடு

மெட்ரோ ரயில் திமுகவின் குழந்தை: ஸ்டாலின் கருத்துக்கு தமிழிசை பதிலடி

webteam

மெட்ரோ ரயில் திட்டம் திமுகவின் குழந்தை என்ற மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மறுப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் அவர் தந்தையின் மூளையிலிருந்து பிறந்த குழந்தை என்று கூறியுள்ளார். ஆதரவற்ற நிலையில் இருந்த அந்தக் குழந்தையை எடுத்து ஊட்டம் கொடுத்து வளர்த்தது, தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மறைந்த ஜெயலலிதாவும்தான்” என்று டிவீட் செய்துள்ளார்.

முன்னதாக, திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர் ஜெயலலிதா என தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியின் கனவுத் திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தை மறைக்க, அதற்கு வித்திட்டவர் ஜெயலலிதா என்று வடிகட்டிய பொய்யை மத்திய அமைச்சரையும் வைத்துக்கொண்டு பேசியிருக்கும் முதலமைச்சர், அரசு விழாவில் அரசியல் நாகரீகத்தை பலி கொடுத்திருக்கிறார் என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தலைவர் தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.