தமிழ்நாடு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

webteam

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், மேலும் 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில், வரும் 26 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 23 ஆம்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 25, 26 ஆகிய தேதிகளில் வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளளது.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடியலேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் புடலூர், சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டையில் தலா 17 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தஞ்சைமாவட்டம் ஈச்சன்விடுதியில் 16 சென்டிமீட்டரும், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 15 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.