தமிழ்நாடு

தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Sinekadhara

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியிருக்கிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், நாளை கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், அடுத்தடுத்த நாட்களில் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் வரும் 10ஆம் தேதிவரை கனமழையும், 11ஆம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 11ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னையிலும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும், அடுத்த 48 மணிநேரத்திற்கு மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானதுவரை சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தென்கிழக்கு இலங்கையை ஒட்டியப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என்றும், தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.