தமிழ்நாடு

மேகதாது விவகாரம்: இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்..!

Rasus

காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.

மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் தொடர்பான அறிவிப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டார். இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள இக்கூட்டத்தில் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்மொழியும் தீர்மானத்தின் மீது திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கருத்துகளைத் தெரிவிக்க உள்ளனர். இதனையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானம் உடனே மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு, மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேன், கர்நாடக நீராவரி நிகம் லிமிடெட் மீது தமிழக அரசு ஏற்கெனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.