தமிழ்நாடு

சாலையோர தடுப்புச் சுவரில் மோதிய கார் - சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மருத்துவ மாணவர்

Sinekadhara

ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாலையோர பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து ஏற்பட்டதில், மருத்துவ கல்லூரி மாணவர் பலியானார். சக மாணவி படுகாயம் அடைந்தார். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சவேரியார்பட்டிணம் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு கார் நேற்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவியான கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி (22) என்பவரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு காரை ஓட்டிவந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சக மருத்துவக் கல்லூரி மாணவரான திருச்சியைச் சேர்ந்த அஜீத் மித்திலேஸ் (25) என்பவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கிய இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்துவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து காட்சிகள் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.