தமிழ்நாடு

ஊசியால் கையை கிழித்து போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் - காரணம் இதுதான்!

Sinekadhara

ஊசியால் கையை கிழித்து ரத்தத்தில் அரசு கட்டணம் வேண்டுமென முதலமைச்சர் படம் முன்பு மருத்துவ கல்லூரி மாணவர்கள் எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசுடைமையாக்கப்பட்ட உயர்கல்வி துறையிலிருந்து சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களிடம் தனியார் கல்லூரிக்கு இணையான கட்டணம்தான் இதுவரை வசூலிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. போராட்டம் நடைப்பெற்ற இடத்திற்க்கு உதயநிதி வந்து அமர்ந்திருந்து உறுதியும் அளித்தார்.

இந்நிலையில் தற்போது வரை மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் தனியார் கல்லூரி கட்டணத்துக்கு இணையாகவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனைக் கண்டித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 13 வது நாளாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கருப்பு உடை அணிந்து கையில் கருப்புக்கொடி ஏந்தி ஊசியால் கை விரலை கிழித்து அதில் வரும் ரத்தத்தில் அரசு கட்டணம் வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்திற்கு அருகே  ரத்தத்தால் எழுதியுள்ளனர்.

தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் இன்று கருப்பு உடை அணிந்து கருப்புக் கொடியுடன் அரசு கட்டணம் வேண்டுமென ரத்தத்தில் எழுதியுள்ளனர். அரசு இப்போதாவது திரும்பிப் பார்க்கவேண்டும் அல்லது போராட்டம் தொடரும் என தெரிவிக்கின்றனர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.