தமிழ்நாடு

2030-க்குள் 1 லட்சம் கோடி அளவிற்கு பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை: தங்கம் தென்னரசு

kaleelrahman

தமிழகத்தில் 2030-க்குள் 1 லட்சம் கோடி அளவிற்கு பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், மாபெரும் கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலையில் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் முத்ராகடன், மகளிர் சுயஉதவிக் குழு கடன், மாற்று திறனாளிக் கடன், சிறு வணிகக்கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன் உள்ளிட்ட 12 வகையான கடன்கள் 5 கோடியே 68 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயில் 2 ஆயிரத்து 246 பேருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, " சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் வளர்ச்சிக்கு கூட்டுறவுத்துறை முக்கிய பங்காற்றியது. அது ஒரு மக்கள் இயக்கமாகவே மாறி விட்டது. பொதுமக்களின் பங்களிப்புடன் வேளாண் மற்றும் தொழில் ரீதியாக கிராமங்களை முன்னேற்ற பெரும் பங்காற்றியது கூட்டுறவு சங்கங்கள். இந்தியாவிலேயே மிகச்சிறந்த கூட்டுறவு மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

மேலும் கூட்டுறவு சங்கங்களே சாதாரண மக்களிடையே பண புழக்கத்திற்கு காரணமாக இருக்கிறது. பெண்கள் தாங்கள் வாங்கும் கடனை உறுதியாக திருப்பி செலுத்தி விடுவார்கள் என தாம் நம்பிக்கை கொள்வதாக தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக முதல்வர் நிதி நுட்ப கொள்கையை உருவாக்கி 2030/ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினார்.

இந்தியாவில் பொருளாதார கட்டமைப்பில் இரண்டாம் இடம் பெற்றுள்ள தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வரும் பணியில் முதல்வர் ஈடுபட்டு வருகிறார் எனவும் அமைச்சர் கூறினார்.