தமிழ்நாடு

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

kaleelrahman

வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டுகளிக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயிலில், பிரசித்திபெற்ற செவ்வாய் ஸ்தலமான வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 29-ஆம் தேதி நடைபெறும் கோவில் கும்பாபிஷேக விழா, நீதிமன்ற உத்தரவுபடியும்; தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல்படியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாதா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பேசும்போது, “நீதிமன்ற உத்தரவுபடி பக்தர்கள் வைத்தீஸ்வரன்கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொள்ளவும், சுவாமி தரிசனம் செய்யவும அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் கும்பாபிஷேகத்தை பார்க்கும் வகையில் யூ-டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாதா கூறும்போது, “28-ஆம் தேதி இரவில் இருந்து பொதுமக்கள் வைத்தீஸ்வரன்கோயில் உள்ளே செல்லாமல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் யாரும் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு தரிசனம் செய்ய வரவேண்டாம்” என்று தெரிவித்தார்.