செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் இயங்கி வரும் இந்தியன் வங்கியின் கட்டடத்தில் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது, மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்தில் இந்த வங்கி செயல்பட்டு வரும் நிலையில், இந்த வங்கிக்கோ ஏ.டி.ஏம் இயந்திரத்திற்கோ இரவு காவலாளி இல்லை.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்தபடி வந்த மூன்று பேர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர், இந்த இயந்திரத்தில் லட்சக் கணக்கில் பணம் இருந்ததால் எவ்வளவு திருட்டு போனது என வங்கி நிர்வாக அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.