முத்துவீரன்
முத்துவீரன் file image
தமிழ்நாடு

மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் காலில் விழுந்த தந்தை... விசாரணையில் தெரியவந்த சோகம்!

PT WEB

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த முதியவர் முத்துவீரன். இவருக்கு 4 மகன்கள், 2 மகள் என மொத்தம் 6 பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தனக்குச் சொந்தமான நிலத்தை விற்று அதில் கிடைத்த 48 லட்சத்து 90 ஆயிரம் ரொக்க பணத்தில் தனது பிள்ளைகளுக்கு தலா ரூபாய் 6 லட்சம் எனப் பிரித்துக் கொடுத்துள்ளார். மீதம் இருந்த பணத்தில் பல லட்சங்களைப் பல தவணைகளில் தன் மகன், மகள் உள்ளிட்டோருக்கே அவ்வபோது வழங்கியுள்ளார்.

பேட்டி கொடுத்த போது

இந்நிலையில் முத்துவீரனையும் அவர் மனைவி ரமணியையும் பிள்ளைகள் யாரும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. முத்துவீரனிடம் கூடுதலாகப் பணம் பெற்ற அவர் மகன் சண்முகசுந்தரம் மட்டும் மாதம் 2000 ரூபாய் பணம் கொடுத்து தந்தைக்கு உதவி செய்து வந்துள்ளார். அவ்வப்போது மருத்துவச் சிகிச்சையும் செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக சண்முகசுந்தரமும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த முத்துவீரன் தன்னையும், தன் மனைவி ரமணியையும், கண்டுகொள்ளாத பிள்ளைகள் மீது மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல்வாழ்வு சட்டம் மற்றும் விதிகள் 2007-இன்படி நடவடிக்கை எடுக்கச் சீர்காழி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

ஆட்சியரிடம் புகார் அளித்த முதியவர் முத்துவீரன்

அந்த மனுவின் மீது விசாரணை நடத்திய கோட்டாட்சியர் அர்ச்சனா அளித்த உத்தரவில், மகன் சண்முகசுந்தரம் அவரின் பெற்றோர்களின் ஆயுட்காலம் வரை மாதம் ரூபாய் 5000 பணத்தை வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட்டார். தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மனுதாரர் 1 மாதத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

புகார் அளிக்க வந்த முத்துவீரன்

இந்நிலையில் மேல்முறையீடு செய்த முத்துவீரன் தன்னையும் தனது மனைவியையும் வாழ்நாள் முழுவதும் பார்த்துக் கொள்வதாகக் கூறி தன்னிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி தனது மகன்கள் மற்றும் மருமகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

பெற்ற மகன்கள் மீது நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி தந்தை புகார் அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.