தமிழ்நாடு

நிரம்பும் தருவாயில் மேட்டூர் அணை..!

நிரம்பும் தருவாயில் மேட்டூர் அணை..!

webteam

மேட்டூர் அணை நீர்மட்டம் பகல் 12 மணி அளவில் முழு கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு 66 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. இதற்கிடையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு 8 மணி முதல் 30 ஆயிரம் கனஅடி தண்ணீராக அதிகரிக்கப்பட்டது. அதன்படி மேட்டூர் அணையின் 16 கண் மதகில் இருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீரும், அணை மற்றும் சுரங்க மின்நிலையம் வழியாக 21 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறக்கப்படுகிறது. 

அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் இருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு சில நாள்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  அதிகப்படியான நீர் திறப்பால் சேலம் மாவட்டக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் பகல் 12 மணி அளவில் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் 16 கண் மதகுகளில் திறக்கப்படும் நீரின் அளவு 8,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக உயர்த்தப்படும் என தெரிகிறது.