தமிழ்நாடு

வரலாற்று ஆசிரியர் ‘மெட்ராஸ்’ எஸ்.முத்தையா காலமானார்

rajakannan

சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்.

வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் 1930ம் ஆண்டு பிறந்தார். இவரது  தந்தை என்.எம்.சுப்பையா செட்டியார் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கொழும்பு நகர முதல்வராகப் பணியாற்றியவர். எஸ்.முத்தையா கொழும்பில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர், அமெரிக்காவில் 1946 முதல் 1951 வரை கட்டட பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் பயின்றார். அமெரிக்க ‘நியு யார்க் டைம்ஸ்’, ‘சண்டே ஸ்பெஷல்’ போன்ற பத்திரிகைகளில் பணி புரிந்தார். 

1951இல் டைம்ஸ் ஆஃப் சிலோன் பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர், 1968ம் ஆண்டு தமிழகம் திரும்பினார். தமிழகம் திரும்பிய பின்னர் வரலாற்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். இலங்கை, சென்னை வரலாறு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 

மெரினா கடற்கரையிலுள்ள பழமை வாய்ந்த டி.ஜி.பி. அலுவலகம் இடிக்கப்படுவதைத் தடுக்கப் பாடுபட்டவர். பழமையான கட்டடங்கள், தொன்மையான கலாச்சாரத்தை காப்பதில் பேரார்வம் கொண்டவர். சென்னையிலிருந்து வெளிவந்த மாதமிருமுறை இதழான மெட்ராஸ் மியூசிக்ஸ் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். 

இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.முத்தையா இன்று காலமானார். அவருக்கு வயது 89.