கோவையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்த தொழிலதிபர் மார்டினின் அலுவலக காசாளர் பழனிசாமியின் உடலை, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென, அவரின் மகன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
கோவையில் தொழிலதிபர் மார்டினுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தில் பழனிசாமி என்பவர் காசாளராக பணியாற்றி வந்தார். மார்டினுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், பழனிசாமியின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் நேரிலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே, மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வெள்ளியங்காடு என்ற இடத்தில் உள்ள குளத்திலிருந்து நேற்று பழனிசாமி சடலமாக மீட்கப்பட்டார். தற்போது பழனிசாமியின் உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பழனிசாமியிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழனிசாமியின் உடலை, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென அவரின் மகன் ரோகின்குமார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரோகின்குமார், “ வருமான வருத்துறையினர் என் தந்தைக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உளைச்சலை ஏற்படுத்தியிருக்கின்றனர். ஆனால் மார்டின் நிறுவனத்தில் பணியாற்றும் இருவர்தான் என் தந்தையை கொலை செய்துள்ளனர். அவர்கள் யார் என்பதை இப்போது அறிவிக்க முடியாத சூழல் உள்ளது.
என் தந்தை பழனிசாமி முன்னிலையில் எங்கள் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. ஆனால் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. என் தந்தையின் உடலில் காயம் உள்ளது. தண்ணீரில் மூழ்கி இறந்தவருக்கு, தலையில் மூக்கில் காயம் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.