love marriage pt
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: சாதி கடந்து திருமணம் செய்த காதல்ஜோடி: பாதுகாப்புகேட்டு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம்!

சாதி கடந்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம்.. எங்கு நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்!

Uvaram P

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அஞ்செட்டி வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரது மகன் பச்சயப்பன் (21) இவர் ஐடிஐ படித்துள்ளார். அதேபோல் ஓசூர் அருகே பேரிகை அடுத்துள்ள பலவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராமப்பா என்பவரது மகள் சௌமியா (21) இவர் டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் படிக்கும்போதே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 8 மாதங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது காதலுக்கும் எதிர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காதல் ஜோடிகளான பச்சயப்பனும், சௌமியாவும் இன்று ஓசூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து கழுத்தில் மாலையோடு இருவரும் பாதுகாப்பு கேட்டு ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், இதனிடையே திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி அங்கு நின்ற பொதுமக்கள் மற்றும் திருமணம் செய்ய உதவியவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.