தமிழ்நாடு

நீரில் மூழ்கிய மணப்பெண். அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற சென்ற மணமகன்.. இறுதியில் சோக முடிவு

kaleelrahman

ஓசூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் அஞ்செட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம், உரிகம் பகுதியைச் சேர்ந்த சிவமாதன் என்பவரின் மகன் சிவா (21) என்பவருக்கும் தேன்கனிக்கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகள் அபிநயா (18) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில் உரிகம் பகுதியில் நடந்த திருவிழாவிற்காக சென்றிருந்த அபிநயா அங்குள்ள தடுப்பணை குட்டையில் குளிக்கச் சென்றுள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் அபிநயா தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு சற்று தொலைவில் இருந்த சிவா ஓடிவந்து காப்பாற்றுவதற்காக குட்டையில் இறங்கியுள்ளார். இதையடுத்து இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த. அஞ்செட்டி போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.