தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசு அமைந்த நிலையில், முதற்கட்டமாக 9 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற விரிவாக்கத்தில் மேலும் 23 பேர் சேர்க்கப்பட்டதால், மொத்தம் 33 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். சென்னை நகரில் 14 தொகுதிகளில் வெற்றி பெற்ற தெவெக, அதில் 7 பேரை அமைச்சர்களாகவும், 2 பேரை சபாநாயகர், கொறடா பதவிகளுக்கு உயர்த்தி, தலைநகர் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக ஆட்சியமைக்க முதல் ஆளாக காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தது. அதோடு திமுக கூட்டணியில் இருந்தும் வெளியேறியது.
அதன் பின்னர் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இடதுசாரிகள், விசிக, IUML ஆகிய கட்சிகள் தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கடரமணன், அருண்ராஜ் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்ற நிலையில், அதில் 23 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் முதலமைச்சரோடு சேர்ந்து 33 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
இதில் சென்னைக்கு அதிக அமைச்சர்கள் வழங்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதியில் 14-ல் தவெக வென்றிருந்த நிலையில், அதில் முதலமைச்சர் விஜய் உட்பட மொத்தம் 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றிருக்கின்றனர்.
அதே போல அமைச்சர் அந்தஸ்து கொண்ட சபாநாயகர் மற்றும் கொறடா ஆகியோரும் சென்னையில் வென்றவர்களே. அந்த வகையில் சென்னையில் வென்ற 9 பேருக்கு முக்கிய பொறுப்புகள் கிடைத்துள்ளது. மேலும் சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ சரத்குமாருக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் பெரம்பூர் தொகுதி முதல்வர் விஜயின் தொகுதியாக உள்ள நிலையில், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, எழும்பூரில் ராஜ்மோகன், தி நகரில் ஆனந்த், ஆர்.கே.நகரில் மரிய வில்சன், வேளச்சேரியில் குமார், மயிலாப்பூர் வெங்கடரமணன் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். அதே போல ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ பிரபாகர் சபாநாயகராகவும், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ சபரிநாதன் அமைச்சர் அந்தஸ்து கொண்ட அரசு கொறடாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.