தமிழ்நாடு

”அனுமதியின்றி கருத்தரங்கு நடத்தக் கூடாது” - மனோன்மணீயம் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு

Sinekadhara

பல்கலைக்கழக வளாகத்திற்குள் இனி எந்தவொரு கருத்தரங்குகள், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் துணைவேந்தரிடம் முன் அனுமதி பெறவேண்டுமென அனைத்துத்துறை பேராசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்திருக்கிறார்.

"பெரியாரும் இஸ்லாத்தும்" என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி சர்ச்சையானது. இதனால் பல்கலைக்கழகம் வாசலில் இந்து முன்னணி அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். காவல்துறையின் முயற்சியால் அங்கு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், 30ம் தேதி தமிழக ஆளுநருடன் அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்படி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் எந்த துறை சார்பில் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்தவேண்டுமென்றாலும் இனி உரிய முன்அனுமதி பெறவேண்டும் என்றும், நிகழ்ச்சி அழைப்பிதழ் மாதிரி மற்றும் யாருக்காக நிகழ்ச்சி நடத்தப்படுகிறது போன்ற விபரங்களை பல்கலைக்கழக துணைவேந்தர் கவனத்திற்கு அனுப்பி உரிய முன்அனுமதி பெற்றே நடத்த வேண்டும் என்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி பல்கலைக்கழகத்தின் அனைத்து துறை பேராசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.