தமிழ்நாடு

மலாய் முதல் மங்கோலியா வரை.. 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் ’மணிமேகலை’

Sinekadhara

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை, 20மொழிகளில் மொழிபெயர்க்கப்படவுள்ளது.

பெளத்த மதத்தை தழுவிய மணிமேகலையின் வாழ்க்கை குறிப்பு மற்றும் பெளத்த மதத்தின் அறநெறிகளை 30 அத்தியாயங்களில் 4 ஆயிரத்து 861அகவல் அடிகளாக இந்தக் காப்பியத்தை சீத்தலைச் சாத்தனார் இயற்றியுள்ளார். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மணிமேகலை காப்பியம், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தால், மலாய், சீனம், ஜப்பானிய, மங்கோலிய மற்றும் பர்மிய மொழிகள் உள்ளிட்ட 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ் பேராசிரியர்கள், அறிஞர்கள் மொழிபெயர்ப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்கள் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தால் ஏற்கெனவே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, வருகிற மே அல்லது ஜூன் மாதம் வெளியாகவுள்ளன. சங்க இலக்கியங்கள் அனைத்தையும் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளிலும் மொழிபெயர்க்க மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.