தமிழ்நாடு

நீரில் மூழ்கிய நீச்சல் தெரியாத சிறுவன்.. யாரிடமும் சொல்லாமல் உடன் சென்றவர்கள் காத்த மவுனம்

webteam

கல்குவாரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் மாங்காடு அருகே நடந்துள்ளது. மாணவன் நேற்று நீரில் மூழ்கிய நிலையில் உடன் குளிக்க சென்றவர்கள் தகவல் தெரிவிக்காததால் தீயணைப்பு துறை வீரர்கள் இன்று உடலை மீட்டுள்ளனர்.

சென்னை குன்றத்தூர் அடுத்த கோவூர், அணுகார்டன் பகுதியை சேர்ந்தவர் சத்யா(36), வடபழனியில் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிரசன்னா(15), கோவூரில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று பிரசன்னா தனது நண்பர்களுடன் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றுள்ளார். பிரசன்னாவிற்கு நீச்சல் தெரியாததால் கரையில் அமர்ந்து குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நீரில் மூழ்கி விட்டார்.

இதையடுத்து அவருடன் வந்த நண்பர்கள் இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டனர். இன்று காலை தனது மகனை காணவில்லை என அவரது நண்பர்களிடம் கேட்டபோது கல்குவாரியில் குளிக்கும் போது நீரில் மூழ்கி விட்டதாக தெரிவித்ததையடுத்து அதிர்ச்சி அடைந்த பிரசன்னாவின் தாய் சத்யா, மாங்காடு போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு சென்ற பூந்தமல்லி தீயணைப்பு போலீசார், நீரில் மூழ்கிய பிரசன்னாவை தேடும் பணியில் ஈடுபட்டு மாணவன் உடலை மீட்டனர்.

இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் வழக்கு பதிந்து மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.