தமிழ்நாடு

மணப்பாறை: கடையில் நிறுத்தியிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

kaleelrahman

மணப்பாறை அருகே கடையில் நிறுத்தி வைத்திருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆனாம்பட்டி படுகைகளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். சிங்கப்பூரில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வரும் இவர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதையடுத்து விடுமுறைக்கு தாயகம் வந்திருந்த முருகேசன் சனிக்கிழமை மீண்டும் சிங்கப்பூர் சென்றுள்ளார். அப்போது தனது எலக்ட்ரிக் பைக்கை தனது நண்பர் பாலு கடையில் விட்டுவிட்டு சென்றுள்ளார். இன்று காலை தனது கடையை திறந்த பாலு, எலக்ட்ரிக் பைக்கிலிருந்து புகை வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பைக் தீப்பற்றி மளமளவேன எரியத் தொடங்கியுள்ளது. அருகில் தண்ணீர் இல்லாத நிலையில், அருகிலிருந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மினரல் வாட்டர் கேன் நீரை கொண்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.