கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி face book
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி | சித்தப்பா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர்! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!

PT

நிலப்பிரச்னை காரணமாக சித்தப்பா மீது இளைஞர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம், கிருஷ்ணகிரி அருகே அரங்கேறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னவன். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த அண்ணன் மகனான செந்திலுக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 19ஆம் தேதியும் இரு குடும்பத்தினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, செந்திலின் தாயார் ராணி கொடுத்த புகாரின்பேரில் காவேரிப்பட்டிணம் காவல்நிலையத்தில் சின்னவன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, நான்கு பேரும் தலைமறைவாகினர். இந்நிலையில் காவேரிப்பட்டிணத்தில் உள்ள தனது மாட்டுத்தீவன கடையில் அமர்ந்திருந்த சின்னவனை பார்த்த செந்தில், தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்துள்ளார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். 70 சதவீத தீக்காயங்களுடன் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, சம்பவத்தின்போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, காண்போரை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.