தமிழ்நாடு

தென்காசி: பன்றிகளுக்கு பயந்து தான் அமைத்த மின்வேலியிலேயே சிக்கி உயிரிழந்த விவசாயி!

webteam

தென்காசி மாவட்டம் புளியங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள கோட்ட மலையாற்றுப் பகுதியில் தனது நிலத்தில் நெற்பயிர்களை பன்றிகள் சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக மின்வேலி அமைத்திருந்தவரே அதை அறியாமல் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் பலவேசம் மகன் அனுஞ்சி(50). இவருக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில்  கோட்டை மலையாற்றுப் பகுதியில் 4 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தென்னை மற்றும் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார் அனுஞ்சி. நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அதை சுற்றி மின் வேலி அமைத்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலையில் நிலத்திற்கு சென்ற அனுஞ்சி மின்வேலியை கவனிக்காமல் அதில் மிதித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.