தமிழ்நாடு

வியக்க வைக்கும் நேர்மை: பெயருக்கு ஏற்றார் போல் வாழும் 'பொய்யாமொழி'..!

வியக்க வைக்கும் நேர்மை: பெயருக்கு ஏற்றார் போல் வாழும் 'பொய்யாமொழி'..!

Rasus

ரயில் நிலையத்தில் தினசரி கூலியாக சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர், தனது வியக்க வைக்கும் நேர்மை குணத்தால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். இதனால் ஏராளமானோர்கள் அவரை பாராட்டி செல்கின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பொய்யாமொழி. 30 வருடத்திற்கும் மேலாக ரயில் நிலையங்களில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 1-ஆம் தேதி தேதி, ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட பை ஒன்றை கண்டுள்ளார். சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்தாலும் அடுத்தவர் பொருளுக்கு சிறிதும் ஆசைப்படாத பொய்யாமொழி, அதனை அப்படியே ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறார். காவல்துறையினர் அதை திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக பண நோட்டுகள். மொத்தமாக  5 லட்சத்து 75,000 ரூபாய் இருந்திருக்கிறது. பின்னர் காவல்துறையினர் உரியவரிடம் தொடர்பு கொண்டு பணத்தை கொடுத்திருக்கின்றனர். இதன்பின் பணத்தை தவறவிட்ட பயணி, பொய்யாமொழியை நேரில் சந்தித்து தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். மேலும் அவர் அன்பளிப்பாக பணம் கொடுக்க முயன்ற போது அதனை பொய்யாமொழி வாங்க மறுத்துவிட்டார். பின்னர் அந்த நபரின் விருப்பத்திற்காக பொய்யமொழி ஒரு தேநீர் மட்டுமே அருந்தியிருக்கிறார். குறைந்த ஊதியம் பெற்றவராக பொய்யாமொழி
இருந்தாலும், தனது நேர்மை குணத்தால் மற்றவர்களை விட செல்வந்தராகவே காட்சியளிக்கிறார்.

தந்தை பெரியாரால் தான் இவருக்கு 'பொய்யாமொழி' என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தற்போது 54 வயதான நிலையிலும் கூட இன்றும் தனது பெயருக்கு ஏற்றார் போன்று பொய் சொல்லாமல் நேர்மையாக வாழ்ந்து வருகிறார். பணத்தை ஒப்படைக்க காரணமாக இருந்த பொய்யாமொழியின் நேர்மையை பாராட்டி அவருக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டுள்ளது.