மதுபோதை தலைக்கேறியதால் சாக்கடையில் தவறி விழுந்த நபர், அதிலேயே உறங்கிய சம்பவம் காண்பவர்களை முகம் சுழிக்க வைத்தது.
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகேயுள்ள பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு மது அருந்திய 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், உச்சகட்ட போதையில் வெளியே வந்துள்ளார். தான் எங்கு இருக்கிறோம் என்பது கூட தெரியாத அளவுக்கு போதையில் இருந்த அவர், தட்டுத்தடுமாறி நடந்து சென்றார்.
போதை தலைக்கேறியதால் நிலைதடுமாறி சாக்கடையில் தவறி விழுந்த நபர், அதில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தார். சிறிது நேரத்தில் களைப்படைந்த அந்த நபர், கழிவுநீர் ஓடும் சாக்கடையிலேயே உறக்கம் கொண்டார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் முகம் சுழித்தபடியே கடந்து சென்றனர். மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கும் தமிழ்நாடு அரசு, இளைஞர்களின் எதிர்காலம் போதையின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருப்பதை, இதுபோன்ற சம்பவங்கள் மூலம் உணர வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.