தமிழ்நாடு

அடுத்த வாரம் திருமணம்.. திடீரென இறந்த தந்தை; மகன் செய்த செயலால் நெகிழ்ந்துபோன கிராம மக்கள்

webteam

கள்ளக்குறிச்சி அருகே தந்தையின் ஆசையை நிறைவேற்ற தந்தையின் சடலம் முன்பு மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் ஊராட்சிமன்ற தலைவர் அய்யம்மாள். இவரது கணவர் ராஜேந்திரன் உடல்நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவரது இறுதிச்சடங்கு இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. 

உயிருடன் இருக்கும்போது தனது மகன் பிரவீன் என்பவருக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற ஆசையை அடிக்கடி வெளிப்படுத்தி வந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக ராஜேந்திரன் உயிரிழந்தார். அடுத்த வாரம் மார்ச் 27ஆம் தேதி அன்று பிரவீனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராஜேந்திரன் திடீரென உயிரிழந்ததால் தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது மகன் பிரவீன் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த சொர்ணமால்யா என்ற பெண் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சம்மதத்தை பெற்று இறந்து தந்தை ராஜேந்திரன் சடலத்தின் முன் திருமணம் செய்துகொண்டார்.

கொட்டும் மழையிலும் தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றும் விதமாக திருமணம் செய்த பிரவீன் மற்றும் அவரது விருப்பத்திற்கு ஒத்துழைப்பு நல்கி சம்மதித்த மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல் அப்பகுதியில் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.