தமிழ்நாடு

செல்போன் அழைப்பை எடுக்காத காதலி... மூன்றாவது மாடியில் இருந்து குதித்த காதலர்!

webteam

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் துரை. வயது 22. தன்னுடன் நெருக்கமாகப் பழகிக்கொண்டிருந்த காதலி நட்பை முறித்துக்கொண்டதுடன், ஃபோன் தொடர்புகளையும் நிறுத்திக்கொண்டதால் மனமுடைந்த அவர், மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று, பலத்த காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார்.

இருவரும் நேரில் சந்திக்காத நிலையில் செல்போன் மூலமே பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் துரையின் செல்போன் அழைப்பை காதலி தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. பலமுறை தொடர்புகொண்டும் காதலி பேசமறுத்ததை அடுத்து கவலையடைந்த காதலர் துரை, கார்ப்பரேஷன் நகரில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தார்.

சத்தம் கேட்டு வந்த குடியிருப்பு வாசிகள் பலத்த காயங்களுடன் கீழே விழுந்துகிடந்தவரைக் காப்பாற்றி, உடனே ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மயக்கமுற்ற நிலையில் மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக, ஆர்கே நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தற்கொலைக்கு முயன்ற துரையின் காதலி அவரது வீட்டுக்குப் பக்கத்தில்தான் வசிக்கிறார் என்ற தகவலை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.