தமிழ்நாடு

‘நான் கொரோனாவை விட பயங்கரமானவன்’-போலீசாரிடம் வீரவசனம் பேசியவர் கைது

webteam

ஊரடங்கை மீறுபவர்கள் மற்றும் வதந்தி பரப்புவோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ‌பேரிடர் மேலாண்மைச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையுடன்,‌ அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேவையில்லாமல் வீட்டைவிட்டு யாரும் வெளியே வர வேண்டாமென்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ் (35) என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையில் தேவையில்லாமல் பயணம் செய்ததாக தெரிகிறது. அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேலும் அவரை வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் போலீசாரின் பேச்சைக் கேட்காத அவர், ''நான் கொரோனாவை விட பயங்கரமானவன். நீங்கள் யார் எனக்கு உத்தரவு போடுவது'' என்று போலீசாரிடம் வீரவசனம் பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து 144 தடை உத்தரவை மீறியது, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்த காவலர்கள், சதீஷை சிறையில் அடைத்தனர்.