தமிழ்நாடு

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பரப்பிய கணவர் கைது!

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பரப்பிய கணவர் கைது!

webteam

விவாகரத்து பெற்ற மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து தொலைபேசி எண்ணுடன் இணையத்தில் பகிர்ந்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த கூனன்பட்டறையைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவருக்கும் சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவருக்கு கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒருமகளும் உள்ளனர். காஞ்சனா - யோகேஸ்வரன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றனர்.

இதனிடையே, 3 மாதங்களுக்கு முன்னர் காஞ்சனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து யோகேஸ்வரன் வாட்ஸ் அப்பில் பரப்பியதாக தெரிகிறது. இது குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் காஞ்சனா அப்போதே புகார் அளித்துள்ளார். யோகேஸ்வரனை நேரில் அழைத்த காவலர்கள் அவரை எச்சரித்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், தற்போது காஞ்சனா பெயரில் பேஸ்புக்கில் போலிக்கணக்கு தொடங்கி அதில் காஞ்சனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து தொலைபேசி எண்ணுடன் யோகேஸ்வரன் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அவரது குடும்பத்தினர் சிலரின் புகைப்படங்களையும் அவர் தவறாக சித்தரித்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. 

தொலைபேசி எண்ணை பலரும் தொடர்புகொண்டு காஞ்சனாவுக்கு மன உளைச்சலை அளித்துள்ளனர். இந்நிலையில் காஞ்சனாவின் உறவினர்கள், செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் யோகேஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர்.