தமிழ்நாடு

90 வயது மூதாட்டி முகத்தில் மனிதக் கழிவை பூசிய நபர்! சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

webteam

காடையாம்பட்டி அருகே 90 வயது மூதாட்டி முகத்தில் மனிதக் கழிவை பூசிய நபரை, தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்காவில் கொங்குபட்டி ஊராட்சியில் உள்ள கொத்தபுளியானூர் கிராமத்தில் 90 வயதான பாப்பாயி என்கிற நாகம்மாள் வசித்து வருகிறார். அதேப்பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர், மூதட்டிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், மூதாட்டியை அடிக்கடி ஆபாசமாக திட்டுவதையும் வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், இன்று மதியம் மூதாட்டி நாகம்மாள் வீட்டில் படுத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற கிருஷ்ணன், மூதாட்டியை திட்டியுள்ளார், அப்போது மூதாட்டியும் கிருஷ்ணனை திட்டியுள்ளார்.

இந்நிலையில், கோபமடைந்த கிருஷ்ணன், மூதாட்டியை திட்டிக்கொண்டே, மனித மலத்தை எடுத்து மூதாட்டி முகத்தில் பூசியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம்போட்டு கத்தியுள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நடந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற போலீசார், மூதாட்டி மீது மனிதக் கழிவை பூசிய கிருஷ்ணனை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.