பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த 11-வயது சிறுமி ஒருவர் கே.கே நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதி ஜாகிர் உசேன் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (67). கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
சிறுமி பள்ளி முடிந்து தினந்தோறும் முருகன் வீட்டு வழியாக நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில், வழக்கம்போல் நேற்றும் அவ்வழியே சிறுமி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது முருகன் நலம் விசாரித்துபோல் பேச்சு கொடுத்துள்ளார்.
பின்னர் தனது வீட்டிற்கு வருமாறு சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து தப்பி ஓடி வந்து தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். விசாரணையில் முருகன் ஏற்கெனவே 2 முறை சிறுமியை வீட்டிற்கு அழைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளது.