தமிழ்நாடு

முதலமைச்சர் பழனிசாமி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

webteam

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்திற்கும், சேலம் இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் செல்கிறார். அப்போது ஓமலூரில் உள்ள அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து விட்டு நெடுஞ்சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு செல்ல உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சரின் 2 வீடுகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெடிகுண்டு பொருட்கள் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை. இது வெறும் மிரட்டல் மட்டுமே என போலீசார் தெரிவித்தனர்.

மேலும், மிரட்டல் விடுத்த நபர் திருப்பூரில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிடிபட்ட நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.